Published : 28 Jul 2020 04:08 PM
Last Updated : 28 Jul 2020 04:08 PM

ஸ்பெயினுக்கு செல்வதை தவிர்க்கவும்: ஜெர்மனி பொது மக்களுக்கு வேண்டுகோள்

ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு ஜெர்மனி தனது நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ஸ்பெயினில் கேட்டலோனியா, அரகான், நவ்அர்ரா ஆகிய பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சமீப நாட்களாக அங்கு தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி அரசின் மருத்து நிறுவனமான ராபர்ட் கோச் அளித்த எச்சரிக்கையின் அடிப்படையில் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

ஜெர்மனியில் சமீப நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருவது கவலை அளிக்கும் வகையில் இருப்பதாக ராபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெர்மனியில் செவ்வாய்கிழமை 633 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இதுவரை 2,07,416 கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

ஜெர்மனியில் கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் கடைகள், பள்ளிகள், விடுதிகள், உணவகங்கள் ஆகியவை படிப்படியாகத் திறக்கப்பட்டுள்ளன. மேலும் மக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

மேலும், கரோனா வைரஸ் பரவலால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதை மீட்டெடுக்கும் நோக்கில் ஜெர்மனி தற்போது இறங்கியுள்ளது. இந்த நிலையில் ஜெர்மனியில் சில இடங்களில் மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவ்விடங்களில் ஊரடங்கையும் ஜெர்மனி அமல்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 1 .6 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x