ஈரானில் 2,93,606 பேருக்கு கரோனா பாதிப்பு: அரசு செய்தித் தொடர்பாளருக்கும் தொற்று உறுதி

ஈரானில் 2,93,606 பேருக்கு கரோனா பாதிப்பு: அரசு செய்தித் தொடர்பாளருக்கும் தொற்று உறுதி
Updated on
1 min read

ஈரானில் அரசின் செய்தித் தொடர்பாளர் அலி ரபீ கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு ஊடகம் தரப்பில், “ஈரானில் அரசின் செய்தித் தொடர்பாளர் அலி ரபீக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சில அரசு அதிகாரிகளுக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரானில் இதுவரை 2,93,606 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,55,144 பேர் குணமடைந்துள்ளனர். 15,913 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும்போது, “புனித இடங்களில் கூடும் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

சுமார் 3.5 கோடி மக்கள் கரோனாவால் பாதிக்கப்படக்கூடிய ஆபத்தில் உள்ளனர் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in