Last Updated : 26 Jul, 2020 08:48 AM

 

Published : 26 Jul 2020 08:48 AM
Last Updated : 26 Jul 2020 08:48 AM

வடகொரியாவில் முதல் கரோனா நோயாளி? சந்தேகத்தால் கேசாங் நகரத்தை மூட அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி உத்தரவு

வடகொரிய அதிபர் கிம் ஜான் உன்: கோப்புப்படம்

சியோல்


வடகொரியாவின் எல்லைப்பகுதி நகரான கேசாங்கில் கரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நகரின் எல்லைகள் அனைத்தையும் சீல் வைக்கவும், முழு ஊரடங்கு பிறப்பித்தும் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார்.

வடகொரியாவில் இதுவரை ஒரு கரோனா நோயாளி கூட இருப்பதாக அதிகாரபூர்வ அறிக்கை ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இப்போது கண்டுபிடிக்கப்பட்ட நபரும் கூட கரோனாவுக்கான அறிகுறிகள் இருக்கின்றனவே தவிர கரோனா வைரஸ் என்று உறுதி செய்யப்படவில்லை.

ஒருவேளை அந்த நபருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால், வடகொரியாவின் முதல் கரோனா நோயாளி ஆவார்.

உலகம் முழுவதும் கரோனாவில் பல்வேறு நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும் போது வடகொரியாவில் மட்டும் கரோனா நோயாளிகள் குறித்த எந்த பாதிப்பும் வெளியிடப்படவில்லை என்பது உலக மருத்து வல்லுநர்கள், தலைவர்களின் வியப்புக்குள்ளான விஷயமாகவே இருந்து வந்தது.

தென் கொரியா, வடகொரியாவுக்குமான எல்லைப்பகுதியில் கேசாங் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் ஏறக்குறைய 2 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். பல்வேறு மாவட்டங்களும் அடங்கியுள்ளன.

கேசாங் நகரம் : படம் உதவி ட்விட்டர்

கடந்த 2016-ம் ஆண்டு வடகொரியாஅணுகுண்டு சோதனை நடத்துவதற்கு முன்புவரை தென் கொரியாவின் பல்வேறு தொழிலதிபர்கள், நிறுவனங்கள் இந்தநகரில் வடகொரிய மக்களுடன் இணைந்து கூட்டாக தொழில்களை நடத்தி வந்தனர். ஆனால், 2016-ம் ஆண்டுக்குப்பின் அந்த நிறுவனங்கள், தொழிற்சாலைகள் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், வடகொரிய அதிபரின் சர்வாதிகார ஆட்சி, அரசியல் அழுத்தம், நெருக்கடி போன்றவற்றை தாங்க முடியாமலும், நல்ல வாழ்க்கைத் தரத்தை நாடியும் வடகொரிய மக்கள் ஏராளமானோர் தென் கொரியாவுக்கு தப்பிச் செல்கின்றனர் . கடந்த 20 ஆண்டுகளில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடகொரிய மக்கள் தென் கொரியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்ஸி வெளியிட்ட செய்தியில், “ தென் கொரியாவுக்கு பல ஆண்டுகளுக்குமுன் தப்பிச்ச சென்று, கடந்த வாரத்தில் வடகொரியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து கேசாங் நகரில் வசித்து வரும் ஒருவருக்கு திடீரென கரோனா அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு ரத்தப்பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கரோனா அறிகுறிகள் இருப்பது தெரிகிறது, மேலும், சுவாசக் கோளாறுகளும் இருக்கின்றன. இவரோடு தொடர்புடைய நபர்களும் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கடந்த 5 நாட்களாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக கேசாங் நகரம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நகரின் எல்லைகள் அனைத்தும் சீல் வைக்க அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சீனாவில் கரோனா வைரஸ் பரவிய உடனே, சுதாரித்த வடகொரியா அனைத்து எல்லைகளையும் சீல் வைத்தது, விமானப் போக்குவரத்தை நிறுத்தி, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகையையும் தடை செய்தது. சுகாதாரப்பணியாளர்கள் யாருக்கேனும் கரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்களைத் தனிமைப்படுத்தவும் உத்தரவிட்டது.

ஆனால், உலக மருத்துவ வல்லுநர்கள், அரசியல் வல்லுநர்கள் கூற்றுப்படி, “ வடகொரியாவில் அடிப்படை மருத்துவக்கட்டமைப்பு என்பது மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது, போதுமான மருந்துகள் மருத்துவமனைக்கு சப்ளை இல்லை. இந்த நேரத்தில் கரோனா பாதிப்புஏற்பட்டால் மோசமான விளைவுகளை அந்நாடு சந்திக்க வேண்டியது இருக்கும்” எனத் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் நேற்று அவசர பொலிட் பியூரோ கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கேசாங் நகரம் குறித்த நிலவரம் தொடர்பாக முழுமையாக ஆலோசிக்கப்பட்டதாகவும், அதன்பின்பே நகரத்தை சீல் வைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக கொரியன் ெசய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

அதுமட்டுமல்லாமல் தென்கொரியாவிலிருந்து ஒருவர் எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழைந்தது எப்படி, பாதுகாப்பு எவ்வாறு கவனக்குறைவாக இருந்தது என்று அதிபர் கிம் கேள்வி எழுப்பியுள்ளார், பாதுகாப்பு குறைபாட்டுக்கு காரணமான அதிகாரிகளுக்கு கடுமையாக தண்டனை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x