மருத்துவமனையின் ஜன்னல் வழியே தாயின் இறுதி நேரத்தை பார்த்துகண்கலங்கிய பாசமிகு மகன்

மருத்துவமனையின் ஜன்னல் வழியே தாயின் இறுதி நேரத்தை பார்த்துகண்கலங்கிய பாசமிகு மகன்
Updated on
1 min read

கரோனாவால் பாதிக்கப்பட்ட தாயின்இறுதி நேரங்களை அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை ஜன்னல் வழியே பாசமிக்க மகன் பார்க்கும் படம் வைரலாகி வருகிறது.

பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள பெய்ட் அவா நகரில் உள்ள மருத்துவமனையில் 73 வயதான ரஸ்மி சுவைதி என்ற மூதாட்டி ரத்தப் புற்றுநோய் காரணமாக சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பும் இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சை சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நோய் தொற்று அபாயம் இருப்பதால், அவரைப் பார்க்க வந்த 30 வயதான ஜிகாத் அல்-சுவைதி என்ற அவரது மகன், தாயைப் பாரக்க அனுமதிக்கப்படவில்லை.

எனினும், அந்த மகனால் தாயை பார்க்காமல் இருக்க முடியவில்லை. மருத்துவமனையின் சுவரில் ஏறி தாய் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டின் மேலே உள்ள ஜன்னலில் அமர்ந்து தாயை பார்த்து கலங்கியபடி இருந்தார். கடந்த வியாழக்கிழமையன்று சிகிச்சை பலனின்றி ரஸ்மி மரணமடைந்தார்.

மருத்துவமனை ஜன்னலில் அமர்ந்தபடி தாயை பாசமிக்க மகன் உருக்கமாக பார்க்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இது குறித்து வருத்தத்துடன் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். ‘பேட்ரியாட்டிக் விஷன்’ அமைப்பின் தலைமை செயல் அதிகாரியும் ஐ.நா. சபைக்கான பிரதிநிதியுமான முகமது சபா, தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படத்தை பகிர்ந்துள்ளார். ‘கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாலஸ்தீன பெண்மணியின் மகன் மருத்துவமனை சுவரில் ஏறி ஜன்னலில் அமர்ந்து தனது தாய் இறக்கும் வரை ஒவ்வொரு நாள் இரவும் அங்கிருந்தபடியே அவரை பார்த்து வந்தார்’ என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்தப் படம் கண்ணீரை வரவழைப்பதாகவும் பலர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in