Published : 18 Jul 2020 07:28 PM
Last Updated : 18 Jul 2020 07:28 PM
கிழக்கு ஆசியாவில் கரோனா பாதிப்பில் சீனாவின் தொற்று எண்ணிக்கையை இந்தோனேசியா கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தோனேசிய சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், ''இந்தோனேசியாவில் இன்று (சனிக்கிழமை) 1,752 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84,882 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவில் கரோனாவுக்கு இதுவரை 4,016 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் 43,268 பேர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
கிழக்கு ஆசியாவில் தற்போது கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக இந்தோனேசியா அறியப்படுகிறது. சீனாவின் கரோனா தொற்று எண்ணிக்கையை இந்தோனேசியா கடந்துள்ளது. சீனாவில் 83,644 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,634 பேர் பலியாகி உள்ளனர்.
சர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் இந்தியாவும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT