Published : 16 Jul 2020 08:50 PM
Last Updated : 16 Jul 2020 08:50 PM

பலுசிஸ்தானில் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

பாகிஸ்தானில் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் அங்கு பல்வேறு மாகாணங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பலுசிஸ்தானில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பலுசிஸ்தான் மாகாண அரசுத் தரப்பில், “வணிக வளாகங்கள், முடி திருத்தும் நிலையங்கள், மற்ற கடைகள் அனைத்தும் காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை இயங்க அனுமதிக்கப்படும். வெள்ளிக் கிழமைகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கடைகளும் மூடப்படும். ஓட்டல்களில் டெலிவரிகளுக்கு அனுமதி உண்டு. அமர்ந்து உணவு உண்ண அனுமதி இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு 10 பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு என்று பலுசிஸ்தான் மாகாண அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் கரோனா பரவல் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தைச் சுட்டிக்காட்டி, அதிபர் இம்ரான்கான் ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்தார்.

இந்த நிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்ததால், கரோனா தொற்று அதிகமாக உள்ள மாகாணங்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பாகிஸ்தான் அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, வணிக நிறுவனங்கள் வாரத்திற்கு 5 நாட்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருந்துக் கடைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள் ஆகியவற்றைத் திறக்க அனுமதி அளிக்கவில்லை. அதேபோல் மதக் கூட்டங்களுக்கும் அனுமதி அளிக்கவில்லை.

பாகிஸ்தானில் 2,57,914 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 5,426 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். 1,78,737 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x