Published : 22 Jun 2020 08:33 PM
Last Updated : 22 Jun 2020 08:33 PM
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான், கரோனா தொற்றை எதிர்கொள்ளும் வகையில் போதிய மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டிருக்காத நிலையில், மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை கூறும்போது, ''ஆப்பிரிக்க நாடுகளில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தொற்று ஏற்பட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகே ஆப்பிரிக்க நாடுகளில் தொற்று ஏற்பட்டது. ஆனால், அந்த அவகாசத்தில் ஆப்பிரிக்க நாடுகள் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. தெற்கு சூடானில் கரோனா தொற்று தொடர்பான முறையான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
இதுவரையில் தெற்கு சூடானில் 1,892 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மொத்தமாக 34 பேர் கரோனா தொற்றால் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், உண்மையான எண்ணிக்கை தெரியவில்லை. தற்போதைய நிலையில் அங்கு 15 லட்சம் பேர் எளிதாக கரோனா தொற்றுக்கு உள்ளாகும் நிலையில் உள்ளனர்'' என்று தெரிவித்துள்ளது.
1.1 கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் சூடானில், கரோனா பரிசோதனை செய்ய ஒரே ஒரு ஆய்வகம் மட்டுமே உள்ளது. அங்கு முதல் தொற்று கடந்த ஏப்ரல் மாதம் உறுதி செய்யப்பட்டது. இதுவரையில் மொத்தமாகவே 9,000 பரிசோதனைகள்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் குறைந்த எண்ணிக்கையிலே பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
வைரஸ் சிகிச்சைப் பிரிவில் மொத்தமாக நூற்றுக்கும் குறைவான அளவிலேயே படுக்கைகள் உள்ளன. அங்குள்ள மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், போதிய படுக்கைகள், வென்டிலேட்டர் என கரோனா தொற்றை எதிர்கொள்ளத் தேவையான அடிப்படை வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. உள்நாட்டுப் போர் காரணமாக அங்கு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை.
அரசு சாரா தொண்டு நிறுவனங்களே மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT