

ரஷ்யாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,58,689 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய அதிகாரிகள் தரப்பில், “ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,855 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,58,689 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் கரோனாவுக்கு 197 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை தற்போது 5,725 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவில் கரோனா பாதிப்பிலிருந்து சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
பிரான்ஸ் ஜெர்மனி, ஸ்பெயின், போர்சுக்கல் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மார்ச் மாதத்தில் கரோனா தொற்று தீவிரமடைந்தது. மே மாதத்தில் அங்கு தொற்றின் தீவிரம் குறைந்தது. ஆனால், கிழக்கு ஐரோப்பா நாடான ரஷ்யாவில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கரோனாவுக்குப் புதிய சிகிச்சை முறையை உருவாக்கியுள்ளதாகவும், விரைவில் சவுதி அரேபியாவுடன் இணைந்து சோதனையில் ஈடுபட உள்ளதாகவும் ரஷ்யா சமீபத்தில் தெரிவித்தது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.