Published : 17 May 2020 06:49 AM
Last Updated : 17 May 2020 06:49 AM

சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிச் சலுகை- அதிபர் ட்ரம்ப்பின் ஆலோசகர் லாறி குட்லோ பரிந்துரை

வாஷிங்டன்

சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பொருளாதார ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் குறித்து உலக நாடுகளை சீனா எச்சரிக்கத் தவறிவிட்டது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். கரோனா வைரஸ் தொற்று காரணமாகஅமெரிக்காவில் 87,530 பேர் உயிரிழந்துள்ளனர். ஆராய்ச்சிப் பணிகளில் காப்புரிமையை திருடி விட்டதாகவும் சீனா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் சீனாவும் கையெழுத்திட்டன. ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த வர்த்தகப் போர் இதன் மூலம் முடிவுக்கு வந்தது. சீனா - அமெரிக்கா இடையேயான வர்த்தக போர் சர்வதேச அளவில் பிற நாடுகளையும் பாதித்து வந்த நிலையில், ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனால் பிற நாடுகளிடையே அமைதியான சூழல்ஏற்படும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது கரோனா வைரஸ் தொற்று இரு நாடுகளிடையே மீண்டும் உரசலை ஏற்படுத்தியுள்ளது.

பணியாற்றுவதற்கு ஏற்ற நாடாக அமெரிக்கா விளங்கினாலும் அதை செயல்படுத்தும் விதமாக கொள்கை முடிவுகள் இதுவரை எடுக்கப்படவில்லை என்று வெள்ளை மாளிகை பொருளாதார கவுன்சில் இயக்குநர் லாறி குட்லோ தெரிவித்துள்ளார். எனினும் பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேற விரும்புவுதாக அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க நிறுவனங்கள் மீண்டும் அமெரிக்காவுக்கே திரும்பும் பட்சத்தில், அதற்கான மூலதன செலவில் 50 சதவீதத்தை வரிச் சலுகை மூலம் அளிப்பது குறித்து தீவிரமாக பரிசீலிப்பதாக அவர்குறிப்பிட்டார். தற்போது 21 சதவீதமாக உள்ள நிறுவன வரியை 10.5 சதவீதமாகக் குறைக்கலாம் எனவும் பரிந்துரைத்துள்ளார். இத்தகைய வரிச் சலுகையை இன்னும் சில ஆண்டுகளுக்கு அளிப்பதன்மூலம் புதிய முதலீடுகளை ஈர்க்க முடியும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான அவர் 18 அம்ச திட்டத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவுடன் ராணுவ உறவை வலுப்படுத்துவதும் ஒன்றாகும்.

கரோனா வைரஸ் பரவல் தொடர்பான விசாரணைக்கு சீனா ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். மேலும் வூஹானில் உள்ள வைராலஜி ஆய்வகத்தில் இருந்து இந்த வைரஸ் பரவியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சீனாவுடனான ஒட்டுமொத்த உறவையும் அமெரிக்கா துண்டித்துக் கொள்ளும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x