Published : 15 May 2020 04:02 PM
Last Updated : 15 May 2020 04:02 PM

உலக சுகாதார அமைப்பின் மீதான நடவடிக்கை அடுத்த வாரம் அறிவிக்கப்படும்: ட்ரம்ப்

உலக சுகாதார அமைப்பின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கரோனா விவகாரம் தொடர்பாக ஏன் முன்னரே, எச்சரிக்கை அளிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக சுகாதார அமைப்புடன் மோதலில் ஈடுபட்டு வருகிறார். மேலும் உலக சுகாதார அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “ உலக சுகாதார அமைப்பின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் விரைவில் அறிக்கவிக்கப்படும். அதிகபட்சமாக அடுத்த வாரம் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்காதான் அதிக நிதி உதவி அளிக்கிறது. கிட்டத்தட்ட 500 மில்லியன் டாலர் வரை அமெரிக்கா நிதி உதவி செய்கிறது. சீனாவோ வெறும் 38 மில்லியன் டாலர்தான் வழங்குகிறது. ஆனாலும் அவ்வமைப்பு சீனாவுக்குச் சாதகமாகச் செயல்படுவதாகத் தெரிகிறது. அவ்வமைப்பு முறையாகச் செயல்பட்டிருந்தால், தற்போது உலக அளவில் ஏற்பட்டு இருக்கும் கரோனா பாதிப்பைத் தடுத்திருக்க முடியும். சீனாவின் ஊதுகுழலாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டு வருகிறது என்று ட்ரம்ப் குற்றம் சாட்டினர்.

மேலும், உலக சுகாதார அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை நிறுத்தி இருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். கரோனா பரவல் தொடர்பாக ஆரம்பம் முதலே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவை விமர்சித்து வருகிறார்.

சீனாவிலுள்ள வூஹான் ஆய்வகத்தில் இருந்து கரோனா வைரஸ் வெளியேறி இருக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டை ட்ரம்ப் முன்வைத்தார். அது தொடர்பாக அமெரிக்கக் குழு வூஹான் ஆய்வகத்தை சோதனை செய்ய சீனா அனுமதிக்க வேண்டும் என்று ட்ரம்ப் கேட்டுக்கொண்டார். ஆனால், அமெரிக்காவின் கோரிக்கையை சீனா மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x