Published : 11 May 2020 12:53 PM
Last Updated : 11 May 2020 12:53 PM

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: குழந்தை உட்பட 4 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சாலையோரத்தில் தொடர்ந்து நான்கு முறை குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் போலீஸார் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் கடந்த ஒருவாரமாகவே குண்டுவெடிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திங்கட்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் வடக்குப் பகுதியில் உள்ள சாலையோரங்களில் அடுத்தடுத்து நான்கு முறை குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்தன. இதில் ஒரு குழந்தை உட்பட பொதுமக்கள் நான்கு பேர் பலியாகினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

அமெரிக்காவுடன் நடந்த அமைதி உடன்படிக்கைக்குப் பிறகு தலிபான்கள் ஆப்கனில் பெரிய அளவிலான தீவிரவாதத் தாக்குதல் ஏதும் நடத்தவில்லை என்று ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலையிட்டது. கடந்த 2001, செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு ஏற்பட்ட மோதலில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை தோஹாவில் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x