Published : 09 May 2020 07:03 AM
Last Updated : 09 May 2020 07:03 AM

கரோனா விவகாரத்தில் விசாரணை தேவை; உலக சுகாதார நிறுவனத்தின் மாநாட்டில் சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க முடிவு

கரோனா வைரஸ் விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் மாநாட்டின் போது சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க உலகின் பல நாடுகள் முடிவெடுத்துள்ளன.

சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் பரவி உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதேசமயம் கரோனா வைரஸைசீனா கட்டுப்படுத்திவிட்டது. அங்குஉயிரிழப்பும் குறைவு. ஆனால்,உலக நாடுகளில் அமெரிக்காதான்அதிகளவில் பாதிக்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது.

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதும் சீனா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். ‘‘கரோனாகுறித்து உண்மைகளை சீனா மறைத்துவிட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த, அமெரிக்க நிபுணர்கள் குழுவை சீனா அனுமதிக்க வேண்டும். கரோனா விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை கண்டறிவோம். வைரஸை வேண்டுமென்றே சீனா பரப்பியிருந்தால், கடும் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கு சீனா பதில் சொல்லியாக வேண்டும். இழப்பீடு தந்தாக வேண்டும்’’ என்றுட்ரம்ப் ஆவேசமாக கூறினார்.

அவரது கருத்தை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோவும் பல முறை கூறிவிட்டார். ஆனால், மற்ற நாடுகள் அமைதி காத்து வந்தன. இந்நிலையில், ட்ரம்ப்புக்கு ஆதரவாக மற்ற நாடுகளும் தற்போது குரல் கொடுக்க தொடங்கிவிட்டன.

குறிப்பாக, கரோனா வைரஸ் குறித்த வெளிப்படையான தகவல்கள், உண்மைகளை சீனா திட்டமிட்டு மறைத்துவிட்டதாகவும், அதற்கு உலக சுகாதார நிறுவனத்தலைவர் டெட்ராஸ் அதானம் கிப்ரியசும் துணை போனதாக அதிபர் ட்ரம்ப் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். சீனாவுக்கு ஆதரவாக டெட்ராஸ் செயல்படுவதாகக் கூறினார். மேலும், உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வந்த நிதியுதவியையும் ட்ரம்ப் நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் ட்ரம்ப்பின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக தற்போது ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வோன் டெர் லீயென் மற்றும் ஐரோப்பிய யூனியன் உட்பட பல தரப்பினரும் குரல் கொடுத்துள்ளனர்.

சீனாவுக்கு எதிரான தீர்மானம்

உலக சுகாதார நிறுவனத்தின் மாநாடு இன்னும் 10 நாட்களில் நடைபெற உள்ளது. அப்போது கரோனா விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடுக்கு எதிராக அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகள் தீர்மானம் கொண்டு வர முடிவெடுத்துள்ளன. அதன்படி தீர்மானத்தை தயாரிக்க பல நாட்டுத் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் பென் வாலஸ், சுவீடன் சுகாதாரத் துறை அமைச்சர் லீனா ஹாலன்கிரன் உட்பட பல நாடுகளின் முக்கியபிரமுகர்கள் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் உலக சுகாதார மாநாட்டின் போது சீனாவுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்று தெரிகிறது.

கரோனா வைரஸ் பரவியதும், அவசர அவசரமாக ஏராளமான மருந்துப் பொருட்களை சீனா இறக்குமதி செய்துள்ளது. அத்துடன் சீனாவில் இருந்து முகக் கவசம், கையுறை, அறுவைச் சிகிச்சையின் போது அணியும் பாதுகாப்பு கவச உடை போன்றவற்றுக்கு சீனா தடை விதித்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் உலக நாடுகள் சந்தேகம் அடைந்துள்ளன. அதற்கேற்ப, தற்போது சீனாவில் பெரும்பாலான நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கிவிட்டன. அங்கிருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்காவின் சந்தேகம் வலுவடைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x