Published : 16 Apr 2020 07:03 AM
Last Updated : 16 Apr 2020 07:03 AM

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாத்திரை அனுப்புகிறது இந்தியா

கரோனா வைரஸை கட்டுப்படுத்த ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா அனுப்புகிறது.

கரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கு, அந்நாட்டு அதிபர் ட்ரம்ப்வேண்டுகோளை ஏற்று ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா அனுப்பியது. இதேபோல, பிரேசிலுக்கும் மருந்துகளை இந்தியா அனுப்பியது. இதற்காக, அமெரிக்க அதிபர் டரம்ப், பிரேசில் அதிபர் போல்சோனாரோ ஆகியோர் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், ஸ்பெயின், இங்கிலாந்து நாடுகளுக்கும் மருந்துகளை இந்தியா அனுப்பியது. இந்நிலையில், இந்தியாவிடம் இருந்து மருந்துகளை ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு அமீரகமும் கோரியுள்ளன. இவற்றில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை முதலில் அனுப்புவதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து டெல்லியில் வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை அனுப்ப ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த மார்ச் 25-ம்தேதி பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தார். ரஷ்யாவுக்கு மருந்துகளை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது. எனினும், இப்போதுள்ள நிலையில், வளைகுடா நாடுகளுக்கு குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள், பாரசிட்டமல் மருந்துகளை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது’’ என்றார்

கரோனா வைரஸ் பாதிப்பை விரைவாக பரிசோதிக்க உதவும் விரைவு பரிசோதனைக் கருவிகள் மற்றும் முகக் கவசங்களை விரைவாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் நோக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு முக்கியத்துவம் அளித்து மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x