Last Updated : 14 Apr, 2020 09:37 AM

 

Published : 14 Apr 2020 09:37 AM
Last Updated : 14 Apr 2020 09:37 AM

அடங்காத கரோனா: அமெரி்க்காவில் 6 லட்சத்தை நெருங்குகிறது பாதிப்பு; 24 மணிநேரத்தில் 1,500 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவை உலுக்கி எடுத்துவரும் கரோனா வைரஸால் பாதிப்பு 6 லட்சத்தை நெருங்குகிறது, கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு 1,535 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் பிறப்பிடமாக இருக்கும் கரோனா வைரஸ் அமெரிக்காவை மையப்புள்ளியாக வைத்து சுழன்று அடித்து வருகிறது. கரோனா வைரஸால் அமெரிக்காவுக்கு நாளுக்கு நாள் உயிரிழப்பும், பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் கரோனாவுக்கு 1,535 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 5-வது நாளாக அமெரிக்காவில் சராசரியாக 1800 பேருக்கு மேல் நாள் தோறும் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 640ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் பாதிக்கப்பட்ட எந்த நாட்டிலும் இதுவரை இதுபோன்ற உயிரிழப்புகள் இருந்ததில்லை.

கரோனாவில் நேற்று ஒரே நாளில் 26 ஆயிரத்து 641 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 5.87 லட்சமாக அதிகரித்துள்ளது. அடுத்த சில நாட்களில் 6 லட்சம் பேர் பாதிப்பை அமெரிக்கா எட்டிவிடும்.

அமெரி்க்காவின் முக்கிய நகரான நியூயார்க்கில் தான் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனாவுக்கு பலியானவர்களில் பெரும்பாலானொர் நியூயார்க்கையும், பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு நியூயார்க் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள்.

இதுகுறித்து நியூயார்க் மாநிலத்தின் ஆளுநர் கூறுகையில் “ நியூயார்க் மாநிலத்தில் மிக மோசமான காலம் என்பது முடிந்துவிட்டது, அங்கு மக்கள் இறப்பின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பல்வேறு மாநிலங்கள் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க விதிக்கப்பட்டுள்ள லாக்டவுனை நீக்க பரிசீலித்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்

அதேசமயம், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ லாக்டவுனை தளர்்த்துவது என்பது அந்தந்த மாநில ஆளுநர்களுக்கு உட்பட்டது. அந்தந்த ஆளுநர்களுக்கு அதற்குரிய அதிகாரத்தை வழங்கியிருக்கிறேன். அவர்களுக்கு துணையாக தேவையான ஆலோசனைகளை வழங்குவோம்” எனத் தெரிவித்தார்

ஆனால் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கையின்படி, லாக்டவுனை படிப்படியாக நீக்க வேண்டும், அவசரப்பட்டு தளர்த்தினால், 2-ம் கட்ட கரோனா அலையால் மோசமான பேரழிவுகளைசந்திக்க நேரிடும் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x