Last Updated : 08 Apr, 2020 06:59 AM

 

Published : 08 Apr 2020 06:59 AM
Last Updated : 08 Apr 2020 06:59 AM

பெருந்துயரத்தை நோக்கி அமெரிக்கா: கரோனா வைரஸுக்கு ஒரே நாளில் 2000 பேர் பலி

கரோனா கோரத் தாண்டவம் அமெரிக்காவில் தலைவிரித்தாடுகிறது. 24 மணி நேரத்தில் மேலும் 2,000 உயிர்களைப் பலி வாங்கியுள்ளது.

இதனையடுத்து அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 12,722 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் 17,127 பேர்களும் ஸ்பெயினில் 13,978 பேர்களும் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவிக்கிறது.

கரோனா நெருக்கடிக்கு தனது எதிர்வினை சரியானதுதான் என்று கூறிய ட்ரம்ப், உலகச் சுகாதார அமைப்புதான் மிகவும் மெதுவாக எதிர் வினையாற்றியதாகக் குற்றம்சாட்டினார்.

உலகச் சுகாதார அமைப்பு தவறாக கணித்து விட்டது, அவர்கள் தவறுதான் இன்று உலகையே ஆட்டிப்படைக்கிறது, இன்னும் சில மாதங்களுக்கு முன்னரே பன்னாட்டு விமானப் போக்குவரத்தை நிறுத்தியிருக்க வேண்டும் என்று ட்ரம்ப் சாடியுள்ளார்.

அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் வருவதற்கு முன்பாகவே சீனாவிலிருந்து சுமார் 4 லட்சம் பேர் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களுக்கு வந்துள்ளனர், இதனால்தான் இன்று கரோனா தாக்கம் கிட்டத்தட்ட கையை விட்டு போகக்கூடிய நிலைமைக்கு வந்துள்ளது.

ஆனால் இன்று உலகச் சுகாதார அமைப்பைக் குற்றம்சாட்டும் அதிபர் ட்ரம்ப் கரோனாவின் ஆரம்பக் கட்டத்தில் அதன் தாக்கத்தை குறைத்து மதிப்பிட்டார் என்றே அவர் மீது பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உலகம் முழுவதும் 14 லட்சத்து 25 ஆயிரத்து 716 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 10 லட்சத்து 41 ஆயிரத்து 920 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 47 ஆயிரத்து 912 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 3 லட்சத்து ஆயிரத்து 828 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 81 ஆயிரத்து 968 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x