Published : 10 Mar 2020 03:39 PM
Last Updated : 10 Mar 2020 03:39 PM

ஆப்கானிஸ்தானில் திரும்பப் பெறப்படும் அமெரிக்கப் படைகள்

ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் நாட்டுப் படைகள் திரும்பப் பெறப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “திங்கட்கிழமை முதல் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. அமெரிக்க - தலிபான் ஒப்பந்தத்தின்படி 135 நாட்களுக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் 8,600 ஆகக் குறைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

சமீபத்தில் ஆமெரிக்கா - தலிபான்களிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுதல் என்பது முக்கிய நிபந்தனையாக இருந்தது.

முன்னதாக, அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலையிட்டது. கடந்த 2001, செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு ஏற்பட்ட மோதலில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை தோஹாவில் கையொப்பமானது.

இந்த ஒப்பந்தத்தின்படி, கடந்த 18 ஆண்டுகளாக இருதரப்பினருக்கும் இடையே நீடித்து வந்த போர் முடிவுக்கு வருகிறது. அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைப்பிரிவுகளை முழுமையாக விலக்கிக்கொள்ளும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x