Last Updated : 01 Mar, 2020 03:03 PM

 

Published : 01 Mar 2020 03:03 PM
Last Updated : 01 Mar 2020 03:03 PM

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு?: அதிபர் கோத்தபாய ராஜபக்சே அறிவிப்பு வெளியிடுகிறார்

இலங்கையில் திட்டமிட்டபடி தேர்தல் நடத்துவதற்கு வசதியாக நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் கோத்தபாய ராஜபக்சே இன்று நள்ளிரவு உத்தரவிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மூத்த சகோதரரும் முன்னாள் அதிபரான மகிந்தா ராஜபக்சேவை இலங்கை பிரதமராக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நியமித்தார். வரும் ஆகஸ்ட் மாதம்வரை அமைச்சரவை செயல்பட வேண்டும் என்பதற்காகக் காபந்து அரசின் பிரதமராக மகிந்தா ராஜபக்சே நியமிக்கப்பட்டார்

தற்போதுள்ள நாடாளுமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அமைக்கப்பட்டது, இதன் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதம் முடிவடைவதால் முன்கூட்டியே தேர்தல் நடத்தும் வகையில் இன்று நாடாளுமன்றம் கலைப்பு குறித்து அறிவிப்பு வெளியாகலாம்.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா நிருபர்களிடம் கூறுகையில், " இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது. கடந்த அரசு 19ஏ சட்டத்திருத்தத்தில் தவறுகளைச்செய்துவிட்டதால், நாங்கள் முன்கூட்டியே தேர்தலுக்குள் செல்லாமல் தடுக்கப்பட்டோம். இந்த முறைத் தேர்தலில் மகிந்தா ராஜகபக்சே நிச்சயம் வெற்றி பெறுவார், அதிகமான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார் என நம்புகிறோம். இதற்கு முன் இருந்த அதிபர்கள், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிந்த ஓர் ஆண்டுகழித்தே கலைத்தனர், நாங்கள் முன்கூட்டியே கலைக்கிறோம்" எனத் தெரிவித்தார்

19ஏ சட்டத்திருத்தம் என்பது இதற்கு முன் இருந்த அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசு அளித்த வாக்குறுதியாகும். இதன்படி அதிபருக்கான ஏகபோக அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, நாடாளுமன்றத்துக்கு அதிகாரத்தை வழங்குவதாகும்.

225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்கள் இருந்தால் ஆட்சி அமைத்துவிடலாம். ஆனால், தேர்தலில் 150இடங்களைப் பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என மகிந்தா ராஜபக்சே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்காக இன்று இரவு அல்லது நள்ளிரவு இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் கோத்தபாய ராஜபக்சே அறிவிப்பு வெளியிடுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபின் காபந்து அரசின் தலைவராக மகிந்தா ராஜபக்சே பிரதமராகத் தொடர்வார், அமைச்சர்கள் பதவியையும், அதிகாரத்தையும் இழப்பார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x