Published : 27 Aug 2015 05:56 PM
Last Updated : 27 Aug 2015 05:56 PM
வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் ஊதுபத்தியிலிருந்து வெளியேறும் நச்சு வாசத்தால் ஏற்படும் கேடு சிகரெட் பிடிப்போருக்கு ஏற்படும் அபாயத்துக்கு இணையானது என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளில் ஊதுபத்தி பயன்படுத்தும் வழக்கம் காலங்காலமாக பின்பற்றப்படுகிறது. குறிப்பாக இந்தியாயில் ஊதுபத்தி ஏற்றுவது பக்தி, ஆன்மீகப் பண்பாட்டின் பிரிக்க முடியாத, தவிர்க்க முடியாத அங்கமாகவே விளங்குகிறது.
வாசனையை வெளிபடுத்தும் ஊதுபத்தியின் புகையினால் அபாயகரமான கேடு விளையக்கூடும் என்று சீன பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கூறுகிறது.
அகிலம், சந்தன மர தூள்களில் போன்ற பெரும்பாலும் ஊதுபத்திகளில் பயன்படுத்தப்படும் வகைகளைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தென் சீன பல்கலைக்கழக ஆய்வு குறித்து ஆராய்ச்சியாளர் ரோங் ஷோ கூறும்போது, "உட்புற சூழலில் பயன்படுத்தும் ஊதுபத்தியால் ஏற்படும் விளைவுகள் குறித்து அதிக அளவில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.
உட்புற சூழலில் இருக்கும் விலங்குகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், ஊதுபத்தியின் ரசாயன குணங்களால் டிஎன்ஏ உள்ளிட்டவைகளின் மரபு ரீதியிலான மாற்றங்கள் நாட்பட்ட அளவில் ஏற்படுவது உறுதியாகி உள்ளது. இதனால் நிச்சயமான மரபணு மாற்றத்தால் ஏற்படும் அபாயம் அதிக அளவில் உள்ளது" என்றார்.
மொத்தம் 64 கலவை உட்பொருட்கள் பயன்படுத்தப்பட்ட ஊதுபத்திகள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. சிகரெட்டால் உண்டாகும் மோசமான விளைவுகளுடன், சிகரெட் ஏற்படுத்தாத மரபணு மற்றும் செல்கள் பாதிப்பும் அதிகம் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
ஆய்வு தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள மியூட்டாஜெனிக்ஸ், ஜெனோடாக்சின்ஸ் மற்றும் சைட்டோடாக்சின்ஸ் ஆகிய நச்சுப் பொருட்கள் புற்றுநோயை விளைவிக்க கூடியவை ஆகும்.
சீன பல்கலைக்கழகத்தின் இந்த ஆய்வின் முடிவு சுற்றுச்சூழல் மற்றும் வேதியியல் ஆய்வுக்கூறுகளை வெளியிடும் ஸ்ப்ரிங்கர் என்ற இதழில் வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT