Published : 31 Jan 2020 08:29 AM
Last Updated : 31 Jan 2020 08:29 AM

நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியதால் ஐரோப்பிய யூனியனில் இருந்து நள்ளிரவில் வெளியேறுகிறது பிரிட்டன்

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற அதன் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து இன்று நள்ளிரவு முதல் பிரிட்டன் வெளியேறுகிறது.

ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 28 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதிலிருந்து வெளியேற பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தரப்பினர் விருப்பம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பிரிட்டனில் கடந்த 2016-ல் நடந்த பொது வாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் வாக்களித்தனர். இதையடுத்து இது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கின.

எனினும், பிரெக்ஸிட் மசோதாவை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிரதமர்கள் அடுத்தடுத்து பதவி விலகினர். இறுதியாக போரிஸ் ஜான்சன் பிரதமரானார். அவராலும் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.

இதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, ஜான்சன் மீண்டும் பிரதமரானார். இதையடுத்து, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் மசோதா கடந்த வாரம் நிறைவேறியது. இதன்மூலம் 3 ஆண்டு இழுபறி முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, பிரிட்டன் வெளியேறுவதை அனுமதிக்கும் மசோதா ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது விவாதம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 621 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் பதிவாகின. 13 உறுப்பினர்கள் வாக்கெடுப்பை புறக்கணித்தனர்.

இதையடுத்து இந்த மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் இன்று நள்ளிரவில் முறைப்படி வெளியேறுகிறது.

முன்னதாக, வாக்கெடுப்பு முடிவுகள் டிஜிட்டல் திரையில் வெளியானபோது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ‘ஆல்ட் லாங் சைனே’ என்ற பாரம்பரிய ஸ்காட்டிஷ் பாடலைப் பாடினர். பிரிட்டன் உறுப்பினர்கள் சக உறுப்பினர்களை ஆரத் தழுவி பிரியா விடைபெற்றனர்.

அடுத்தகட்டமாக, ஐரோப்பிய யூனியனில் மீதம் உள்ள 27 உறுப்பு நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு பேச்சுவார்த்தை நடத்தும்.

இதுகுறித்து ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் டேவிட் சசோலி கூறும்போது, “ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான மசோதாவுகு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஐரோப்பிய யூனியனிலிருந்து ஒரு உறுப்பு நாடு முதல் முறையாக வெளியேறுவது வருத்தமளிக்கிறது. எனினும், பிரிட்டன் மக்களின் விருப்பத்தை ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் மதிக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x