Published : 28 Jan 2020 04:09 PM
Last Updated : 28 Jan 2020 04:09 PM

ஆப்கானிஸ்தானில் 2019-ல் குண்டு மழை பொழிந்த அமெரிக்கா: கடந்த 10 ஆண்டுகளை விட அதிகம்

ஆப்கானிஸ்தானில் கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு குண்டு மழையை அமெரிக்கா நடத்தி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க விமானப் படை தரப்பில், “கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் ஆப்கானிஸ்தானில் 7,423 குண்டு வெடிப்புத் தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா நடத்திய தாக்குதலைவிட அதிகம். ஒபாமா அமெரிக்காவின் அதிபராக இருக்கும்போது 2009 ஆம் ஆண்டு 4,147 குண்டுகள் வீசப்பட்டன” என்று தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்கா தலைமையில் நடந்தது.

இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், ஆப்கனில் தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x