Published : 18 Jan 2020 01:07 PM
Last Updated : 18 Jan 2020 01:07 PM
ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பாம்பியோவை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி சந்தித்தார்.
வாஷிங்டனில் நடந்த இந்தச் சந்திப்பில் ஆப்கானிஸ்தான், காஷ்மீர், ஈரான் விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இந்தச் சந்திப்பு குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள், “மத்திய கிழக்கு நாடுகளில் சமீபத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து குரேஷி இந்தச் சந்திப்பில் ஆலோசனை நடத்தினார். மேலும், ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்தும், காஷ்மீர் விவகாரம் குறித்தும் இருவரும் கலந்தாலோசித்தனர். மேலும், அமெரிக்கா - பாகிஸ்தான் இடையே வர்த்தக உறவுகள் குறித்தும் இருவரும் பேசினர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி கூறும்போது, “அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சருடனான இன்றைய சந்திப்பில் இரு தரப்பு உறவு குறித்துப் பேசினோம். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்பட பாகிஸ்தான் முக்கிய அங்கம் வகிக்கும். ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சியை இரு நாடுகளும் பகிர்ந்துகொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காஷ்மீர் விவகாரம் குறித்து குரேஷி மூத்த அமெரிக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT