ஆடியோ கசிந்த விவகாரம்: உக்ரைன் பிரதமர் ராஜினாமா

ஆடியோ கசிந்த விவகாரம்: உக்ரைன் பிரதமர் ராஜினாமா
Updated on
1 min read

அதிபரை விமர்சித்த ஆடியோ ஒன்று வெளியானதைத் தொடர்ந்து, உக்ரைன் பிரதமர் ஒலெக்ஸி ஹான்சருக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இவ்வாரம் வெளியான அந்த சர்ச்சையான ஆடியோவில், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் உக்ரைனின் பொருளாதாரம் குறித்து பிரதமர் ஒலெக்ஸி பேசியுள்ளார்.

அதில், அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு பொருளாதாரத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று பிரதமர் ஒலெக்ஸி ஹான்சருக் பேசியதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

இந்நிலையில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஒலெக்ஸி ஹான்சருக், அதிபர் அலுவலகத்தில் கடிதம் அளித்துள்ளார்.

இதுகுறித்து ஒலெக்ஸி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “அதிபர் மீதான எங்கள் மரியாதை மற்றும் நம்பிக்கை குறித்த சந்தேகத்தை நீக்க, ராஜினாமா கடிதத்தை அதிபரிடம் வழங்கி இருக்கிறேன். வெளியான ஆடியோ செயற்கையாக உருவாக்கப்பட்டது. அதில் உண்மை இல்லை” என்றார்.

பிரதமரிடமிருந்து ராஜினாமா கடிதத்தைப் பெற்றுள்ளதாகவும் அதுகுறித்துப் பரிசீலிப்பதாகவும் அதிபர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in