Published : 03 Jan 2020 01:47 PM
Last Updated : 03 Jan 2020 01:47 PM

சுலைமானைக் கொன்ற விவகாரம்: மூன்று நாள் துக்க தினம்; அமெரிக்கா பழிவாங்கப்படும்- ஈரான் சபதம் 

ஈரான் ஆதரவு பெற்ற குவாட்ஸ் படையின் தளபதி சுலைமான் கொல்லப்பட்டதற்கு மூன்று நாள் துக்க தினத்தை ஈரான் அறிவித்துள்ளது.

ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதற்குப் பதிலடியாகவே அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைச் சூறையாடினர்.

அதற்குப் பதிலடியாக இன்று அதிகாலை பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் தற்காப்பு நடவடிக்கைக்காக எடுத்ததாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தெரிவித்தது.

இந்நிலையில் சுலைமான் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஈரானின் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா காமெனி, ஈரானில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரான் புரட்சிகரப் படையின் முன்னாள் கமாண்டர் மோசின் ரேஸாய் அமெரிக்காவைப் பழிவாங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சுலைமான் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா - ஈரான் இடையே இருந்த விரிசல் மேலும் அதிகமாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x