Published : 10 Dec 2019 05:45 PM
Last Updated : 10 Dec 2019 05:45 PM
வடகொரிய சமீபத்தில் நடத்தியது ராக்கெட் இன்ஜின் சோதனை என்று தென் கொரியா தெரிவித்துள்ளது.
முக்கியமான ஏவுகணை சோதனை ஒன்றை வெற்றிகரமாக நடத்தி உள்ளதாக வடகொரிய அரசு தெரிவித்தது. இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை ஆயுத சோதனை என தகவல்கள் வெளியானது. இதுகுறித்து தென்கொரியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் செவ்வாய்க்கிழமை கூறும்போது, “வடகொரியா சமீபத்தில் நடத்திய சோதனை ராக்கெட் இன்ஜின் சோதனை. இதன் மூலம் தடைசெய்யப்பட்ட நீண்ட தூர ராக்கெட் ஏவுதள சோதனைக்கான முதற் கட்ட நடவடிக்கைகளை அந்நாடு மேற்கொண்டிருக்கிறது” என்றார்.
வடகொரியா தொடர்ந்து நடத்தி வரும் ஏவுகணை சோதனைகள் கவலையளிப்பதாக தென் கொரியா சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எனினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.
இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அது முதல் வடகொரியா - தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டு ட்ரம்ப் - கிம் இடையே சந்திப்பு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில் நடைபெற்றது. இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் அமெரிக்கா - வடகொரியா இடையே அணு ஆயுத சோதனை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் நடந்து வரும் நிலையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT