Last Updated : 29 Aug, 2015 05:16 PM

 

Published : 29 Aug 2015 05:16 PM
Last Updated : 29 Aug 2015 05:16 PM

அல் ஜஸீரா செய்தியாளர்களுக்கு 3 ஆண்டு சிறை: எகிப்து நீதிமன்றம்

உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதான குற்றச்சாட்டில் அல் ஜஸீரா செய்தியாளர்களுக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை விதித்தது எகிப்து நீதிமன்றம்.

அல் ஜஸீரா தொலைக்காட்சியை சேர்ந்த செய்தியாளர் பீட்டர் கிரெஸ்டே, செய்திப் பிரிவின் தலைவர் முகமது பாஹ்மி மற்றும் செய்தி தயாரிப்பாளர், கேமராமேன் ஆகியோர் மூவரும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினருக்கு உதவியதாகவும் பொய்யான செய்தியை வெளியிட்டதாகவும் நீதிமன்றத்த்தில் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் முகமது பாஹ்மிக்கு கூடுதலாக 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் மூவருக்கும் ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் நடந்த மறுவிசாரணையை அடுத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கத்தாரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அல் ஜஸீரா ஆங்கில செய்தி சானலுக்கு எகிப்தின் கெய்ரோவில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்து, உரிய அனுமதி பெறாமல் செய்திகளை அனுப்பியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதோடு, உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டு வந்ததாகவும், தடை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு ஆதரவாக வெளியிடப்பட்ட பிரசுரங்களை அவர்கள் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

ஏற்கெனவே முஸ்லிம் சகோதரத்துவக் கட்சிக்கு ஆதரவாகவும், அந்த அமைப்பின் முக்கிய தலைவரும், முன்னாள் அதிபருமான முகமது மோர்ஸிக்கு ஆதரவாகவும் அல் ஜஸீரா செயல்பட்டு வருவதாக எகிப்து அரசு நீண்டகாலமாக குறை கூறி வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x