Published : 08 Nov 2019 10:46 AM
Last Updated : 08 Nov 2019 10:46 AM

ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் பலி; 300 பேர் காயம்

ஈரானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 5 பேர் பலியாகினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவாகியது.

ஈரான் நிலநடுக்கம் குறித்து ஊடகங்கள் , “ஈரானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அசர்பஜன் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.17 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவாகியது.

இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். 300க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நிலநடுக்கப் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 10 கி.மீ. என்றும் இந்த நிலநடுக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றும் அமெரிக்கப் புவியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈரானில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு சுமார் 600 பேர் பலியாகினர். 9,000க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர். கடந்த 2003 ஆம் ஆண்டு ஈரானின் பாம் நகரில் ரிக்டர் அளவுகோலில் 6.6 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 26,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x