Published : 06 Nov 2019 06:07 PM
Last Updated : 06 Nov 2019 06:07 PM

இராக்கில் தொடரும் வன்முறை: போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு

இராக்கில் அரசை எதிர்த்து, தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் அதில் அப்துல் மஹ்திக்கு எதிராக 3 வாரங்களுக்கும் மேலாகப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. அக்டோபர் மாதம் தொடங்கிய இப்போராட்டத்தில் தற்போது வரை 250 பேர் பலியாகியுள்ளனர். 2,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து இராக்கில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

மேலும், இராக் தலைநகர் பாக்தாத்தில் போராட்டம் தீவிர நிலையை அடைந்துள்ளது. சாலை மறியல் போன்ற செயல்களில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டங்களைக் கைவிட்டு, நாடு முழுவதும் இயல்பு நிலையை மீட்டெடுக்குமாறு இராக் பிரதமர் அப்துல் மஹ்தி போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும் போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இன்று (புதன்கிழமை) தலைநகர் பாக்தாத்தில் போராட்டக்காரர்கள் பாலத்தை மறித்தபோது அவர்களை நோக்கி பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை இராக்கில் நடந்த போராட்டத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர்.

ஆயுதம் இல்லாமல் போராடும் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலை அங்குள்ள அமெரிக்கத் தூதரகம் கண்டித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x