Published : 06 Nov 2019 04:58 PM
Last Updated : 06 Nov 2019 04:58 PM

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நவாஸ் ஷெரிப்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீதான ஊழல் வழக்கில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து லாகூரில் உள்ள கோட்லாக்பாத் சிறையில் நவாஸ் ஷெரிப் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அக்டோபர் 22 ஆம் தேதி நவாஸ் ஷெரிப்புக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பு எனக் கருதி சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது.

இதைத் தொடர்ந்து நவாஸ் ஷெரிப்புக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு என்எஸ்டிஇஎம்ஐ வகையிலான மாரடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து உடனடியாக ஷெரிப், லாகூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், உயிருக்குப் போராடி வருவதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் அவரது குடும்ப மருத்துவர் அட்னான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தீவிர சிகிச்சைக்குப் பின் தற்போது நவாஸ் ஷெரிப் வீடு திரும்பி இருக்கிறார் என்று பாகிஸ்தான் ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், ”மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நவாஸ் ஷெரிப் உடல் நிலை தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளது. நவாஸ் ஷெரிப்பை பார்வையாளர்கள் பார்ப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x