Published : 01 Nov 2019 10:10 AM
Last Updated : 01 Nov 2019 10:10 AM

கர்தார்பூர் செல்ல பாஸ்போர்ட் தேவையில்லை; முதல்நாள் கட்டணம் கிடையாது: இம்ரான் கான் அறிவிப்பு

புதுடெல்லி

கர்தார்பூர் குருத்வாராவுக்கு வரும் சீக்கிய யாத்ரீகர்கள் யாருக்கும் பாஸ்போர்ட் தேவையில்லை எனவும், தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு கட்டணம் இல்லை எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டி, பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள பகுதி கர்தார்பூர். சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் தேவ், தமது இறுதி காலத்தை இங்கு கழித்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், அவரது நினைவாக கர்தார்பூரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ‘தர்பார் சாஹிப்' என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டது.

இந்த குருத்வாராவுக்கு செல்வது என்பது சீக்கியர்களின் வாழ்நாள் கடமைகளில் ஒன்றாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. எனினும், பாகிஸ்தானுக்கு விசா வாங்கி செல்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்ததால் இந்தியாவின் தேரா பாபா நானக் குருத்வாராவுக்கும், கர்தார்பூர் குருத்வாராவுக்கும் இடையே வழித்தடம் அமைக்க இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே கர்தார்பூர் வழித்தடம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டன. இந்தியாவில் இந்தக் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், பாகிஸ்தானில் இவ்வழித்தடம் அமைக்கப்பட்டுவிட்டது.
இதன் தொடர்ச்சியாக, கர்தார்பூர் வழித்தடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தானது.

கர்தார்பூர் வழித்தடத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த மாதம் 9-ம் தேதி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

இந்தநிலையில் கர்தார்பூர் வழித்தட நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் சீக்கிய பக்தர்களுக்கு முதல் நாள் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் இருந்து கர்தார்பூர் வரும் சீக்கிய யாத்ரீகர்கள் யாருக்கும் பாஸ்போர்ட் தேவையில்லை. போதுமான அடையாள அட்டை மட்டும் வைத்திருந்தால் போதுமானது. 10 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அதுமட்டுமின்றி குருநானக்கின் 550வது பிறந்த தினமான நவம்பர் 9-ம் தேதி அன்று கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கர்தார்பூர் வழித்தடம் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் நிச்சயமாக இந்திய அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும் என வெளியுறவுத்துறை ஏற்கெனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x