Published : 18 Oct 2019 04:03 PM
Last Updated : 18 Oct 2019 04:03 PM

பாகிஸ்தானுக்கு 4 மாதங்கள் கெடு: எப்ஏடிஎப் எச்சரிக்கை

பாரிஸ்

தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி, 27 விதிமுறைகளையும் பின்பற்ற பாகிஸ்தானுக்கு 4 மாதங்கள் (2020 பிப்ரவரி) கெடு வழங்கி தீவிரவாதிகளுக்கான நிதித்தடுப்பு அமைப்பான எப்ஏடிஎப் அமைப்பு எச்சரித்துள்ளது.

2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுப்பதில் முன்னேற்றம் இருக்காவிட்டால் பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என எப்ஏடிஎப் அமைப்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை மற்றும் தீவிரவாத நிதியுதவியைத் தடுப்பதற்கான கொள்கைகளை வகுக்க, ஜி7 நாடுகளால் 1989-ல் உருவாக்கப்பட்டதுதான் நிதி செயல் நடவடிக்கைக் குழு (எப்ஏடிஎப்).

பிரான்ஸின் பாரீஸைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தக் குழு, விதிமுறைகளை மீறும் நாடுகளைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்து வருகிறது.

தீவிரவாதச் செயலுக்கு நிதியுதவி செய்து வரும் பாகிஸ்தான் கடந்த ஆண்டு ஜூன் மாதம் எப்ஏடிஎப் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இம்மாத இறுதியில் இந்தத் தடைக் காலம் முடிவடைய உள்ளது. இந்தப் பட்டியலில் சேர்க்கப்படும் நாடுகள் சர்வதேச நிதியம் (ஐஎம்எப்), உலக வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியனிடமிருந்து நிதியுதவி பெறுவது கடினம்.

இந்நிலையில், எப்ஏடிஎப் மறு ஆய்வுக் கூட்டம் கடந்த இரு நாட்களாக பாரீஸில் நடைபெற்றது. இதில், 200-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை மற்றும் தீவிரவாத நிதியுதவியைத் தடுக்க பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எப்ஏடிஎப் அமைப்பிலிருந்து வரும் தகவல்கள் கூறுகையில், " தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை, பண உதவியைத் தடுத்தல், தீவிரவாத முகாம்களை அழித்தல், கைது செய்தல் போன்றவற்றை அடுத்த 4 மாதங்களுக்குள் பாகிஸ்தான் தீவிரப்படுத்த வேண்டும்.

எப்ஏடிஎப் அமைப்பு நிர்ணயித்த 27 விதிமுறைகளில் 5 விதிமுறைகளை மட்டுமே பாகிஸ்தான் கடைப்பிடித்துள்ளது. அடுத்த 4 மாதங்களுக்குள் அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடித்து செயலில் இறங்காவிட்டால் அடுத்தகட்டமாகப் பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கின்றன.

ஆனால், பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கு மலேசியா, சீனா, துருக்கி ஆகிய நாடுகள் சம்மதிக்கவில்லை. ஒரு நாடு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பதற்கு 3 நாடுகள் ஆதரவு இருந்தால் போதுமானதாகும். அந்த வகையில் பாகிஸ்தானுக்கு 3 நாடுகள் ஆதரவு இருந்ததால், கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படாமல் கடும் எச்சரிக்கையுடன் விடப்பட்டது.

தற்போது பாகிஸ்தான் கிரே லிஸ்ட் பட்டியல் நாடுகளில் இருக்கிறது. தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள், பண உதவி ஆகியவற்றைத் தடுக்க போதுமான அக்கறை காட்டாததால் இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது கறுப்புப் பட்டியலில் ஈரான், வடகொரிய நாடுகள் இருக்கின்றன. ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து க்ரே லிஸ்ட்நாடுகள் வரிசையில் இருந்துவந்தால், அந்த நாட்டுக்கு உலக வங்கி, ஐஎம்எப், ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றிலிருந்து உதவிகள் கிடைப்பது கடினமாகும்.

ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x