Published : 17 Oct 2019 10:36 AM
Last Updated : 17 Oct 2019 10:36 AM

ஜம்மு காஷ்மீரில் முதலீட்டாளர்களுக்கான கொள்கைகள் விரைவில் வெளியீடு: நிர்மலா சீதாராமன் தகவல்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் : கோப்புப்படம்

வாஷிங்டன்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு எந்தெந்த துறைகளில் முதலீடு செய்யலாம், முதலீட்டாளர்களுக்கான கொள்கைகள் குறித்து மிக விரைவில் மத்திய அரசு அறிக்கை வெளியிடும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.

வாஷிங்டனில் உள்ள சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எப்) தலைமை அலுவலகத்தில் அமெரிக்காவில் உள்ள இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்தியா-அமெரிக்கா வர்த்தக மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பங்கேற்றார்.

அப்போது அங்குள்ள முதலீட்டாளர்களுடன் நிர்மலா சீதாரமன் கலந்துரையாடினார். அப்போது ஜம்மு காஷ்மீரில் முதலீடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்துப் பேசியதாவது:

''ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபின், அங்கு பல்வேறு துறைகளில் தனியார் முதலீட்டுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இதன் மூலம் அந்த மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

அதன்படி ஜம்மு காஷ்மீரில் எந்தெந்த துறைகளில் முதலீடு செய்யலாம், முதலீட்டாளர்களுக்கு என்ன வசதிகள் செய்யலாம் என்பது குறித்த திட்டங்கள் வகுக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டோம். மிக விரைவாக ஜம்மு காஷ்மீரில் முதலீட்டாளர்களுக்கான கொள்கை வெளியிடப்படும்.

பெரும்பாலும் ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாத் துறை, ஃபைன் ஆர்ட்ஸ், கைவினைப்பொருட்கள் துறை, மரவேலை, கார்பெட், பட்டு உற்பத்தி, குங்குமப்பூ உற்பத்தி, ஆப்பிள் ஏற்றுமதி ஆகியவற்றில் அதிகமான முதலீட்டுக்கு வாய்ப்புள்ளது.

ஜம்மு காஷ்மீரில் முதலீ்ட்டாளர்களுக்கு சிறப்பாக வசதிகளை எவ்வாறு செய்யலாம், முதலீட்டை ஊக்குவிக்கலாம் என்பது குறித்து சிறந்த திட்டங்களை வகுத்து வருகிறோம். மத்திய உள்துறை அமைச்சகம், நிதியமைச்சகம் இடையே பல்வேறு கலந்துரையாடல்களுடன் திட்டங்கள் தயாராகின்றன.

துபாயைச் சேர்ந்த பெரிய தொழிலதிபர் தன்னுடைய முதலீட்டை ஜம்மு காஷ்மீர் பக்கம் திருப்ப விருப்பம் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் முகத்தை மாற்றியபின், அங்கு முதலீட்டுக்கு ஏராளமான சலுகைகளைக் கொடுக்க இருக்கிறோம்''.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x