Published : 16 Oct 2019 06:36 PM
Last Updated : 16 Oct 2019 06:36 PM

சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலை நிறுத்த வேண்டும்: சீனா

சிரியாவில் துருக்கி நடத்தும் ராணுவத் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

துருக்கி எல்லையை ஒட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்றும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் துருக்கி அதிபர் எர்டோகன் கடந்த வாரம் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வடக்கு சிரியாவில் தனது படைகளை வாபஸ் பெற்றது அமெரிக்கா. சிரியாவில் துருக்கிப் படையினரும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குழந்தைகள். இந்நிலையில் சிரியாவில் துருக்கியின் அத்துமீறலை சீனா கண்டித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “அனைத்து நாடுகளும் ஐ.நா. சாசனத்தின் நோக்கங்களையும், கொள்கைகளையும், சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் .

சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி நடத்தும் தாக்குதலை நிறுத்த வேண்டும். சிரியாவின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, சிரியாவின் குர்து படைகள் மீதான தாக்குதலை துருக்கி நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, ரஷ்யா, ஈரான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x