Published : 15 Oct 2019 05:27 PM
Last Updated : 15 Oct 2019 05:27 PM

பேச்சுவார்த்தைக்காக சவுதி செல்கிறார் இம்ரான் கான்

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட, சவுதி செல்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

ஈரான் அதிபர் ரவ்ஹானியுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூட்டாக இணைந்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றனர்.

இதில் இம்ரான் கான் பேசும்போது, “சவுதிக்கும் - ஈரானுக்கும் இடையேயான மோதலை பாகிஸ்தான் விரும்பவில்லை. தெஹ்ரானுக்கும் ரியாத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஈரான் அதிபர் ரவ்ஹானியுடன் ஆக்கபூர்வமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தியதாக நம்புகிறோம்” என்றார்.

இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக இம்ரான் கான் இன்று சவுதி செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஜியோ நியூஸ், ''மத்தியக் கிழக்கு நாடுகள் ஈரான் - சவுதி இடையே மோதல் காரணமாக ஏற்பட்ட பதற்றம் குறித்து இம்ரான் கான் ஞாயிற்றுக்கிழமை ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இன்று சவுதி செல்ல இருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்'' என்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் - சவுதி இடையே நிலவும் பதற்றத்தைத் தணிக்க தன்னைப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ட்ரம்ப்பும் சவுதியும் கேட்டுக் கொண்டதாக இம்ரான் கான் கூறியிருந்தார்.

முன்னதாக, சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அரம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். எனினும் இதன் பின்னணியில் ஈரான் உள்ளதாக சவுதியும் அமெரிக்காவும் குற்றம் சுமத்தியுள்ளன. இதனால் ஈரான் - சவுதி இடையே பதற்றம் நீடிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x