Published : 14 Oct 2019 11:40 AM
Last Updated : 14 Oct 2019 11:40 AM
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் நேபாளப் பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த வாரம் தெற்காசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். இதில் ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் மோடி இடையிலான 2-வது முறைசாரா சந்திப்பு தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் நடந்தன. இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை மாலை நேபாளம் சென்றடைந்த சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சனிக்கிழமை நேபாள அதிபர் பிந்தியா தேவியைச் சந்தித்தார் சின அதிபர் ஜி ஜின்பிங். இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடந்த நேபாளத் தலைவர்களுடனான சந்திப்பில் சீனா - நேபாளம் இடையே 18 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்த ஒப்பந்தத்தில் வர்த்தகம், கட்டுமானம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் அடக்கம்.
நேபாளின் அடுத்த இரண்டு ஆண்டுகால முன்னேற்றச் செயல்களுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் சுமார் 56 பில்லியன் ரூபாயை வளர்ச்சி நிதியாக அறிவித்துள்ளார். கெரங் மற்றும் காத்மண்ட் இடையேயான சுரங்கப் பாதைக்கு சீனா உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நேபாளப் பயணத்தில் ஜி ஜின்பிங் பேசும்போது, “சீனாவைப் பிளவுபடுத்த முயல்பவர்கள் நசுக்கப்படுவார்கள்" என்று எச்சரித்தார்.
நேபாளத்தின் 23 ஆண்டுகால வரலாற்றில் அந்நாட்டுக்குச் சென்ற முதல் சீன அதிபர் ஜி ஜின்பிங் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT