Published : 11 Oct 2019 11:23 AM
Last Updated : 11 Oct 2019 11:23 AM

குர்து படைகள் - துருக்கி இடையே எங்களால் மத்தியஸ்தம் செய்ய முடியும்: ட்ரம்ப்

குர்து கிளர்ச்சிப் படைகள் மற்றும் துருக்கி இடையே எங்களால் மத்தியஸ்தம் செய்ய முடியும் என்று நம்புவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் கூறும்போது, “எங்களிடம் மூன்று வழிகள் உள்ளன. ஒன்று ஆயிரக்கணக்கான வீரர்களை அனுப்பி ராணுவ ரீதியாக வெல்வது. இரண்டாவது துருக்கி மீது பொருளாதாரத் தடை விதிப்பது. மூன்றாவது துருக்கி மற்றும் குர்து கிளர்ச்சியாளர்கள் இடையே மத்தியஸ்தம் செய்வது. இதில் எங்களால் மத்தியஸ்தம் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி தற்காப்புக்காக ராணுவ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தீவிரவாதத்துக்கு எதிராக துருக்கி எல்லைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு குர்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த ராணுவ நடவடிக்கை தீவிரவாதிகளையும் அவர்களது முகாம்களையும் குறிவைத்து நடத்தப்படுகிறது என்றும் துருக்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

எனினும் துருக்கியின் செயலுக்கு இந்தியா, ஈரான் உள்ளிட்ட உலக நாடுகள் வருத்தம் தெரிவித்துள்ளன.

மேலும், குர்து கிளர்ச்சியாளர்கள் தொடர்பாக சிரியா - துருக்கி இடையே பேச்சுவார்த்தை நடைபெற ரஷ்யா அழுத்தம் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சிரியாவில் குர்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக துருக்கி எடுக்கும் ராணுவ நடவடிக்கை காரணமாக சிரியாவின் வடக்குப் பகுதியில் அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x