Published : 20 Sep 2019 12:42 PM
Last Updated : 20 Sep 2019 12:42 PM

ஆப்கனில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 30 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ விமானங்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கன் ஊடகங்கள் , ''ஆப்கானிஸ்தானில் நன்கர்ஹர் மாகாணத்தின் கிழக்கில் உள்ள மலைப் பகுதியில் அறுவடைப் பணி முடிந்து மக்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது அமெரிக்க ராணுவத்தால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் பலியாகினர். 40 பேர் வரை காயமடைந்தனர்” என்று தெரிவித்துள்ளன.

இந்தத் தாக்குதலை ஆப்கன் பாதுகாப்புத் துறை அமைச்சகமும், அமெரிக்க அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், பலியான பொதுமக்களின் உண்மையான எண்ணிக்கையை ஆப்கன் அரசு இதுவரை அளிக்கவில்லை.

இந்நிலையில் இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, "அமெரிக்க ராணுவம் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அப்பகுதியில் தாக்குதல் நடத்தினோம். அங்கு பணிபுரிந்த மக்கள் பலியானது குறித்து உண்மை நிலையைக் கண்டறிந்து வருகிறோம்” என்றார்.

சுமார் 14,000க்கும் அதிகமான அமெரிக்க ராணுவத்தினர் ஐஎஸ் மற்றும் தலிபான்களுக்கு எதிராக ஆப்கன் அரசுடன் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்துவரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் போரை நிறுத்த அமெரிக்கா தலைமையில் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. பேச்சுவார்த்தை அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்ட நிலையில், ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர்.

இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்தார். ட்ரம்ப்பின் முடிவு தலிபான்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x