Published : 18 Sep 2019 02:39 PM
Last Updated : 18 Sep 2019 02:39 PM
இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீண்டும் தனதாக்கிக் கொள்ள இந்தியா முயலுகிறது, இதனை சர்வதேச நாடுகள் கண்டிக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி இந்தியா ரத்து செய்து, அரசியலமைப்புச் சட்டம் 370 பிரிவை திரும்பப் பெற்றது. இந்த விஷயத்தை பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் சபையில் எழுப்ப முயன்று வருகிறது.
இந்தநிலையில் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ‘‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் இந்தியாவுடையது என்ற நமது நிலைப்பாட்டில் எப்போதுமே மாற்றமில்லை. அதனை நிச்சயமாக ஒருநாள் மீட்போம்’’எனக் கூறினார்.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒருநாள் இந்தியாவின் பகுதியாக மாறும் என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இது பொறுப்பற்ற பேச்சு. இருநாடுகள் இடையேயான உறவை சீர்குலைக்கும்.
இந்த பகுதியின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த பேச்சை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
அந்த மக்களின் விருப்பத்துக்கு மாறாக அந்த பகுதியை இந்தியா தனது கட்டுப்பாட்டில் வைக்க முயலுகிறது. இதனை திசை திருப்பும் வகையில் தொடர்ந்து இந்திய அரசியல் தலைவர்கள் பேசி வருகிறார்கள். சர்வதேச நாடுகள் இதனை வன்மையாக கண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT