Published : 18 Sep 2019 09:38 AM
Last Updated : 18 Sep 2019 09:38 AM

இஸ்ரேல் தேர்தல்; நெதன்யாகுவுக்கு பின்னடைவு?- தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு தகவல்

ஜெருசலேம்

இஸ்ரேல் பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்படும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலில் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக இன்று பொதுத் தேர்தல் நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வென்று மீண்டும் இஸ்ரேலின் பிரதமரானார் பெஞ்சமின் நெதன்யாகு. மேலும் இந்த தேர்தலில் மொத்தமுள்ள 120 இடங்களில், 65 இடங்களில் நெதன்யாகுவின் லுகுட் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள் வென்று ஆட்சியைப் பிடித்தன.

எனினும் தொடர்ந்து கட்சிகள் ஆதரவளிக்காத நிலையில், நெருக்கடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இஸ்ரேலில் நேற்று பொதுத் தேர்தல் நடந்தது.

தேர்தலுக்கு முன்னர் வெளிவந்த கருத்து கணிப்புகளில் முடிவுகளில் முன்னாள் ராணுவத் தலைவரான பென்னி கண்ட்ஸின் புளூ மற்றும் வெள்ளைக் கூட்டணி மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு லிகுட் கட்சி இடையே கடுமையான போட்டி நிலவும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசு அமைவதில் சிறிய கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் வாக்குப்பதிவு முடிந்தநிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி 120 உறுப்பினர்களை கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நெதன்யாகு கட்சி 55 -57 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பென்னி கண்ட்ஸ் தலைமை ஏற்றுள்ள கட்சி அதை விட கூடுதல் இடங்களை பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனினும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்படும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கன்றன.

நெதன்யாகு அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த அவிக்டோர் லிபர்மென் இந்த தேர்தலில் கிங்மேக்கராக இருப்பார் என்றும் கருத்து கணிப்புகள் கூறுகின்றன. அதுபோலவே யாஸ்ரேல் கட்சியும் 8 இடங்கள் வரை இந்த தேர்தலில் பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x