Published : 11 Sep 2019 02:56 PM
Last Updated : 11 Sep 2019 02:56 PM
ஆப்கன் அரசு மற்றும் தலிபான்கள் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைக்கு ஐ.நா. அழைப்பு விடுத்துள்ளதை இந்தியா ஆதரித்துள்ளது.
ஆப்கனில் அதிபர் தேர்தலுக்கு முன்னர் தலிபான்களுக்கும், ஆப்கான் அரசுக்கும் இடையே நேரடியான பேச்சுவார்த்தைக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் ஐ.நா.வின் இம்முடிவுக்கு இந்தியா தனது ஆதரவை வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவுக்கான தூதரான சையத் அக்பரூதின் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “ ஜனநாயக வழியில் மட்டுமே ஆப்கன் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர முடியும். எனவே ஆப்கன் அரசு தலிபான்களை நேரடியாகப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள ஐ. நா. பொதுச் செயலாளர் முடிவை இந்தியா ஆதரிக்கும்” என்றார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடக்கின்றன. மேலும் ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுத்துவித்துக்கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இதனை மையமாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக 9 சுற்றுகள் அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்ட நிலையில், இது தொடர்பான முன்னெடுப்புக்காக அமெரிக்கப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அமெரிக்கப் பிரதிநிதிகள் 17 பேர் பாகிஸ்தான் வந்தனர்.
இந்நிலையில் ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்தார்.
பேச்சுவார்த்தையை அமெரிக்கா ரத்து செய்ததை தலிபான்கள் கடுமையாக விமர்சித்த நிலையில், தலிபான்களை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT