Published : 03 Sep 2019 06:31 PM
Last Updated : 03 Sep 2019 06:31 PM
காஷ்மீர் விவகாரம் குறித்து சவுதி இளவரசர் முகமது பின் சல்மானிடம் இம்ரான் கான் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானின் ஜியோ டிவி இன்று (03/09) வெளியிட்ட செய்தியில், “பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த நடவடிக்கை குறித்து சவுதி இளவரசர் முகமது பின் சல்மானிடம் இன்று தொலைபேசியில் பேசி இருக்கிறார். காஷ்மீர் தொடர்பாக சவுதி இளவரசர் முகமது சல்மானிடம் இம்ரான்கான் தொலைபேசியில் பேசி இருப்பது இது நான்காவது முறையாகும்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்கள் உரையாடலின் முழு விவரம் வெளியாக வில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அரசியலமைப்பின் 370-வது பிரிவைத் திரும்பப் பெற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.
இந்திய அரசின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவுடன் வர்த்தக உறவு, ரயில், பஸ் போக்குவரத்தையும் ரத்து செய்தது. சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தைக் கொண்டு சென்று வருகிறது.மேலும், செப்டம்பர் மாதம் ஐ.நா.வில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை பிரதானமாக எழுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT