Published : 31 Aug 2019 02:38 PM
Last Updated : 31 Aug 2019 02:38 PM

ஈரான் ஏவுகணைச் சோதனை தோல்விக்கு அமெரிக்கா காரணமில்லை: ட்ரம்ப்

ஈரான் சமீபத்தில் நடத்திய ஏவுகணைச் சோதனை தோல்விக்கு அமெரிக்கா காரணமில்லை என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் சமீபத்தில் நடத்திய ஏவுகணைச் சோதனை தோல்வியில் முடிந்ததாகவும் இதில் அமெரிக்காவின் தலையீடு ஏதும் இல்லை என்றும் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் அதற்குரிய ஆதாரப் படத்துடன் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஈரானின் ஏவுகணைத் தளமான சிம்னனில் சஃபிர் எஸ்எல் வி ஏவுகணை தொடர்பான இறுதி ஏவுகணைச் சோதனை தோல்வியில் முடிந்தது. இது தொடர்பான காரணத்தைக் கண்டறிய ஈரானுக்கு வாழ்த்துகள்” என்று ஏவுகணைச் சோதனை தோல்வியில் முடிந்த படத்துடன் பதிவிட்டிருந்தார்.

ஆனால், ஏவுகணைச் சோதனையில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஈரான் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் ரகசியத்தை ட்ரம்ப் வெளியிட்டு இருப்பதாகவும் இதற்கு முன்னர் இருந்த அதிபர்கள் இவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்றும் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

முன்னதாக, ஈரான் மீது பொருளாதார ரீதியாக அமெரிக்கா அழுத்தத்தை அளித்து வரும் நிலையில் அதன் பிராந்தியத்தில் தனது படையை அதிகரித்து வருவதால் வளைகுடா பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

அணு ஆயுதச் சோதனை தொடர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இவ்வாறு தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரான் மீதும் அதன் முதன்மைத் தலைவர்கள் மீதும் புதிய பொருளாதாரத் தடையை ட்ரம்ப் அறிவித்தார்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமாக ஈரானின் பொருளாதாரம் பெருமளவு பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்கா, ஈரானை பேச்சுவார்த்தைக்கு சில நாட்களுக்கு முன்னர் அழைத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x