Published : 10 Aug 2019 05:07 PM
Last Updated : 10 Aug 2019 05:07 PM

தான்சானியாவில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்து விபத்து: 60 பேர் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளானதில் 60 பேர் பலியாகினர்.

இதுகுறித்து தான்சானியா போலீஸார் தரப்பில், ''தான்சானியாவின் தலைநகரம் சர் எஸ் சலாமிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மோரோகோராவில் இன்று (சனிக்கிழமை) எரிபொருள் டேங்கர் லாரியிலிருந்து எரிபொருள் வெளியாகியது. இதிலிருந்த எரிபொருளைச் சேகரிக்க மக்கள் கூட்டமாகக் கூடினர் அப்போது டேங்கர் திடீரென வெடித்தது. இதில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 60 பேர் பலியாகினர் 70 பேர் வரை காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டது.

விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறும்போது, “ இந்த விபத்து மிகவும் வேதனையானது. இங்கு இறந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. விபத்து நடந்த பகுதி நெரிசலான பகுதி என்பதால் அதன் எரிபொருளைத் திருடாமல் இருந்தவர்களும் பலியாகினர்” என்றார்.

இதே மாதிரியான டேங்கர் வெடித்து விபத்துக்குள்ளானதில் நைஜீரியாவில் கடந்த மாதம் 50 பேர் பலியாகினர். மே மாதம் நைகர் நாட்டிலும் டேங்கர் லாரி வெடித்து உயிர் சேதம் ஏற்பட்டது.

ஆப்பிரிக்க நாடுகளில் டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x