Published : 23 Jul 2019 11:43 AM
Last Updated : 23 Jul 2019 11:43 AM
ஆப்கான் போரை ஒருவாரத்தில் முடிக்கலாம். ஆனால் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்படுவார்கள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசியல் ரீதியாக அமெரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் சென்றுள்ளார். இதில் ஆப்கானிஸ்தானில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் பாகிஸ்தான் உதவத் தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதற்கு ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் , இது 18 ஆண்டுகாலமாக ஆப்கானிஸ்தானில் நடைபெறும் உள்நாட்டுப் போரில் ஒருகுறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “கடந்த இரண்டு வாரத்தில் நாங்கள் இந்த விவகாரத்தில் பல முன்னேற்றங்களை அடைந்திருக்கிறோம். இதில் பாகிஸ்தான் எங்களுக்கு உதவியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தலுக்கு முன்னர் செப்டம்பர் பிற்பகுதியில் தலிபான்களுடன் அரசியல் ரீதியாக ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா அழுத்தத்தை கொடுக்கும்.
இதுவே ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படை வீரர்களை திரும்பப் பெற்று , அமெரிக்காவின் நீண்ட நாள் போரை முடிப்பதற்கான சிறந்த வழி. நாங்கள் ஆப்கானிஸ்தானில் சண்டையிட விரும்பினால் ஒருவாரத்தில் அந்தப் போரில் வெற்றி பெற்று விடுவோம். ஆனால் பல லட்சக்கணக்கானவர்களைக் கொல்ல விரும்பவில்லை” என்றார்.
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டு தலிபான்களுக்கு எதிராகச் சண்டையிட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT