Last Updated : 31 Jul, 2015 12:26 PM

 

Published : 31 Jul 2015 12:26 PM
Last Updated : 31 Jul 2015 12:26 PM

பஞ்சாப் தாக்குதல்: இந்திய குற்றச்சாட்டுக்கு பாக். ஆவேச பதில்

பஞ்சாப் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானுடன் தொடர்புடையவர்கள் என்ற இந்திய தரப்பின் குற்றச்சாட்டை அந்நாட்டு அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையை குறிப்பிட்டு பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் காஸி கலீலுல்லா, "இந்தியாவின் குற்றச்சாட்டு இருநாட்டின் அமைதியையும் பாதுகாப்பையும் பாதிக்கச் செய்யும்.

தக்க ஆதாரம் எதுவும் இன்றி முதற்கட்டமாகவே பாகிஸ்தான் மீது விரல் நீட்டிக் குறை கூறுவதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும். இதனை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.

இதனால் எவ்வித பயனும் இருக்காது. பாகிஸ்தானும் தீவிரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அதிரடி நடவடிக்கைகள் தினம் எடுத்துவரும் நிலையில் இந்திய ஊடகங்கள் பாகிஸ்தான் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டி வருவது துரதிஷ்டவசமானது" என்றார்.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் கடந்த 27ம் தேதி புகுந்த 3 தீவிரவாதிகள், அங்குள்ள தினாநகர் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் குவிக்கப்பட்ட ராணுவம், தேசிய கமாண்டோ வீரர்கள் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர், சுமார் 12 மணி நேர துப்பாக்கி சண்டைக்குப்பின் அந்த 3 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர்.

அவர்களிடம் இருந்து ஜி.பி.எஸ். கருவிகள் மற்றும் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அதனை வைத்து மேற்கொண்ட ஆய்வின் முதல்கட்ட தகவலின்படி, அவர்கள் பாகிஸ்தானிலிருந்து, ராவி நதி பாகிஸ்தானுக்குள் நுழையும் தாஸ் பகுதி வழியாக ஊடுருவியுள்ளனர் என்றும் அதே தீவிரவாதிகள்தான் தல்வாண்டி கிராமம் அருகே ரயில்பாதையில் 5 வெடிகுண்டுகளை வைத்தனர் என்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது விளக்கத்தில் சுட்டிக்காட்டி இருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x