Published : 11 Jun 2015 10:34 AM
Last Updated : 11 Jun 2015 10:34 AM
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு தவறான சிகிச்சை அளித்த இந்திய வம்சாவளி சிங்கப்பூர் மருத்துவருக்கு அந்நாட்டு மருத்துவ கவுன்சில் அபராதம் விதித்துள்ளது.
சிங்கப்பூரில் மருத்துவராக இருப்பவர் டாக்டர் கருணா மூர்த்தி கவிதா (32). இந்திய வம்சாவளியரான இவர், சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
2012ம் ஆண்டு இம்மருத்துவ மனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு மூத்த மருத்துவர் ஒருவர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தார். அப்போது, நரம்பு மூலமாகவும், முதுகுத் தண்டுவடம் மூலமாகவும் செலுத்தும் வகையில் இரண்டு மருந்துகளை நோயாளிக்கு பரிந்துரைத்திருந்தார்.
தவறான முறையில்
மூத்த மருத்துவரின் கீழ் பணியாற்றி வந்த கவிதா, அந்த நோயாளிக்கு மருந்துகளைச் செலுத்த வந்தார். அப்போது அங்கு நரம்பு வழியாகச் செலுத்தும் ஒரே ஒரு மருந்து மட்டும்தான் வைக்கப்பட்டிருந்தது. அந்த மருந்தை தவறுதலாக அவர் நோயாளியின் முதுகுத் தண்டு வடம் வழியாகச் செலுத்தி விட்டார்.
பின்னர், தான் தவறு செய் திருப்பதை உணர்ந்துகொண்ட அவர், அதுகுறித்து மூத்த மருத்துவர்களுக்குத் தெரியப் படுத்தினார். அவர்கள் மூலம் இந்த விஷயம் நோயாளியின் குடும்பத்தினருக்கும் தெரியப் படுத்தப்பட்டது. அந்த நோயாளி சமீபத்தில் உயிரிழந்தார். அதற்கு இவ்வாறு தவறான மருந்து செலுத்தப்பட்டது காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சிங்கப்பூர் மெடிக்கல் கவுன்சிலில் புகார் செய்யப்பட்டது. அந்தப் புகாரை விசாரித்த அதிகாரிகள், கவிதா தவறு செய்தபோதும் அதை ஒப்புக் கொண்ட காரணத்தாலும், அவருக்கு வேறு சில நோயாளிகளின் குடும்பத்தினர் கொடுத்த நற்சான்றிதழ்களின் அடிப்படையிலும், அவருக்கு சிறை தண்டனை வழங்காமல் 2 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்கள் (சுமார் ரூ. 1 லட்சம்) அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT