Published : 25 May 2015 04:59 PM
Last Updated : 25 May 2015 04:59 PM
தாலிபான்களால் கடத்தப்பட்ட தனது மகன் 2 ஆண்டுகளுக்குப் பின் தன்னுடன் தொலைபேசியில் பேசியதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசஃப் கிலானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிலானி, "ஞாயிற்றுக்கிழமை எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியது என்னுடைய மகன் ஹைதர். ஹைதரின் குரலைக் கேட்டதும் எனக்கு அழுகையே வந்துவிட்டது.
கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் பேசிய ஹைதர், நலமாக உள்ளேன். நீங்கள் நலமாக இருக்கிறீர்களா என்று கேட்டார்" எனத் தெரிவித்தார்.
கிலானி மேலும் கூறும்போது, “தாலிபான்களின் நோக்கம் பணம் கிடையாது. சிறையில் இருக்கும் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களை விடுவிக்க வேண்டும் என்பதே அவர்களது குறிக்கோளாக உள்ளது. ராவல்பிண்டியில் இருக்கும் சிலரை விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் சமீபத்தில் அரசுக்கு வந்தது" எனக் கூறினார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கிலானியின் மகன் அலி ஹைதர்(20) கடந்த 2013 ஆம் ஆண்டு தாலிபான் தீவிரவாதிகளால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டார்.
ஹைதரை விடுவிக்க பாகிஸ்தான் அரசு பல தரப்பட்ட நடவடிக்கைகள் எடுத்தும் அவை எதுவும் இதுவரை பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT