Published : 30 Mar 2015 08:52 AM
Last Updated : 30 Mar 2015 08:52 AM
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் (91) உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலகத் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
சிங்கப்பூரின் தந்தை என்றழைக் கப்படும் லீ கடந்த 23-ம் தேதி உயிரிழந்தார். முதலில் அதிபர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல் பின்னர் பொதுமக்க ளின் அஞ்சலிக்காக நாடாளுமன்ற வளாகத்துக்கு கொண்டு வரப் பட்டது.
இரங்கல் நிகழ்ச்சியில் லீயின் மூத்த மகனும் தற்போதைய பிரதமரு மான லீ சியன் லூங் பேசும்போது, சிங்கப்பூர் மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களிலும் லீ வாழ்கிறார், அவரைப் போன்ற தலைவர் இனிமேல் பிறப்பது அரிது என்று கண்ணீர் மல்க கூறினார்.
15 லட்சம் பேர் அஞ்சலி
உலகத் தலைவர்களின் அஞ்சலிக்குப் பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து சுமார் 15 கி.மீட்டர் தொலைவில் உள்ள சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக வளாகத்துக்கு திறந்தவெளி வாக னத்தில் லீயின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
அப்போது பலத்த மழை பெய்தது. ஆனால் மழையை பொருட்படுத்தாமல் வழிநெடுகிலும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு நின்று மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தினர்.
பல்கலைக்கழக வளாகத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் தேசிய கீதத்துடன் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நிறைவு பெற்றது. அப்போது சிங்கப்பூரின் ரயில், பஸ் சேவைகள் ஆங்காங்கே ஒரு நிமிடம் நிறுத்தப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
உடல் தகனம்
பின்னர் லீயின் உடல் மண்டாய் தகன மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இதில் லீயின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT