Published : 17 Jan 2015 12:12 PM
Last Updated : 17 Jan 2015 12:12 PM
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகை யிட்டு தாக்க முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்தபோது இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சார்லி ஹெப்டோ வார இதழ் அண்மையில் முகமது நபிகள் கார்ட்டூனை அட்டை படமாக வெளியிட்டது. இதை கண்டித்து இஸ்லாமி ஜமாத் தலபா என்ற அமைப்பினர் கராச்சி நகரில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தை நேற்று முற்றுகையிட்டு தாக்க முயன்றனர்.
அவர்களை போலீஸார் தடுத்த போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறியதால் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பத்திரிகை நிருபர் உட்பட பலர் காய மடைந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பிரான்ஸ் தூதரகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சார்லி ஹெப்டோ இதழை கண்டித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT