Published : 06 Dec 2014 04:57 PM
Last Updated : 06 Dec 2014 04:57 PM
ஏமனில் அல்-காய்தா பிடியிலிருந்த அமெரிக்க புகைப்பட செய்தியாளர் லூக் சோமர்ஸ் பலியானதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.
அல்-காய்தாவுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் இன்று(சனிக்கிழமை) தனது வான்வழித் தாக்குதலை தொடங்கியது. ஏமனின் ஷபா மாகாணத்தில் பயங்கரவாதிகளின் பதுங்கிடம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். ஆனால் கடத்தப்பட்ட அமெரிக்க புகைப்பட செய்தியாளர் லூக் சோமர்ஸின் நிலை குறித்து அவர் விவரம் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் அல்-காய்தா பிடியிலிருந்த அமெரிக்க புகைப்பட செய்தியாளரும் தனது சகோதரருமான சோமர்ஸ் பலியானதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் தனக்கு அமெரிக்க புலனாய்வு மையத்தின் மூலம் தெரிய வந்ததாக அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் தி அசோசியேட்டட் பிரெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "எனது சகோதரர் லூக் சோமர்ஸ்(33) பலியானதாக புலனாய்வு மைய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து வெள்ளை மாளிகை தகவல் எதுவும் எங்களுக்கு வரவில்லை.
ஏமன் தலைநகர் சனாவிலிருந்து இது குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நேரத்தில் லியூக் சோமர்ஸின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் மட்டும் தான் தெரிவிக்க முடியும்" என்றார்.
அல்-காய்தா அமைப்பின் ஏமன் நாட்டுப் பிரிவான "அரேபிய தீபகற்பத்துக்கான அல்-காய்தா' (ஏ.க்யூ.ஏ.பி.) அமைப்பு கடந்த 2013-ஆம் ஆண்டு சனாவில் பணிபுரிந்து வந்த லூக் சோமர்ஸ் என்ற அமெரிக்க புகைப்பட செய்தியாளரை கடத்தி தங்களது பிணை கைதியாக வைத்துக்கொண்டனர்.
இந்த நிலையில் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தங்களிடம் பிணைக் கைதியாக உள்ள அமெரிக்க செய்தியாளரைக் கொன்று விடுவதாக வியாழக்கிழமை அன்று அவர்கள் வீடியோ பதிவு வழியாக மிரட்டல் விடுத்தனர்.
அவர்கள் வெளியிட்ட விடியோவில் ஓர் ஆண்டுக்கு முன்பு ஏமனில் கடத்தப்பட்ட அமெரிக்க புகைப்படச் செய்தியாளர் லூக் சோமர்ஸ் அந்த விடியோவில் தோன்றி தான் படுகொலை செய்யப்பட உள்ளதாக கூறினார்.
பின்னர் பேசிய முகமுடி அணிந்த பயங்கரவாதி, "அமெரிக்கா எங்களது கோரிக்கைகளை ஏற்காவிட்டால், அமெரிக்க செய்தியாளர் மூன்று நாள்களுக்குள் கொல்லப்படுவார்' என்று அந்த விடியோவில் மிரட்டல் விடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT