Last Updated : 30 Dec, 2014 12:36 PM

 

Published : 30 Dec 2014 12:36 PM
Last Updated : 30 Dec 2014 12:36 PM

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கும் முன் லக்வி கைது

மும்பை தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தீவிரவாதி ஜகியுர் ரஹ்மான் லக்வி பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பாக மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.

முகமது அன்வர் என்பவரைக் கடத்தியது தொடர்பான வழக்கில், லக்வி கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜகியுர் ரஹ்மான் லக்விக்கு பாகிஸ்தான் அரசு விதித்த தடுப்புக் காவலை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் ரத்து செய்தது.

இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ரூ.10 லட்சம் பிணைத் தொகையை லக்வி தரப்பினர் நேற்று காலை நீதிமன்றத்தில் செலுத்தினர். இதையடுத்து அவர் விடுவிக்கப்படவிருந்த நிலையில், ஆள் கடத்தல் வழக்கில் லக்வி நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.

ஜகியுர் லக்விக்கு பாகிஸ்தான் தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி ஜாமீன் வழங்கியது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், லக்வியை தடுப்புக்காவலில் பாகிஸ்தான் அரசு அடைத்தது. இருப்பினும், பொது அமைதி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு விதிக்கப்பட்ட தடுப்புக் காவல் நீட்டிப்பை எதிர்த்து ஜகியுர் லக்வியின் தரப்பு மேல்முறையீடு செய்தது. இதைத்தொடர்ந்து, தடுப்புக்காவலை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை கடுமையாக ஆட்சேபித்த இந்தியா, கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் பசித்தை அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் லக்வி சிறையிலிருந்து விடுவிக்கப்படும் முன்பு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக லக்வியின் வழக்கறிஞர், "சட்ட அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்கத் தயாராக இல்லை. லக்வியைக் கைது செய்திருப்பது, நீதிமன்றத்தின் உத்தரவைப் புறக்கணிப்பது போலாகும்" என்றார். இந்தியா மற்றும் உலக நாடுகளின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால், பாகிஸ்தான் அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x